2021-ம் ஆண்டுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட எழுத்தாளர்கள் 6 பேருக்கு கருணாநிதி பொற்கிழி விருது: பபாசி அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட எழுத்தாளர்கள் 6 பேருக்கு கருணாநிதி பொற்கிழி விருது: பபாசி அறிவிப்பு
Updated on
1 min read

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2007-ம் ஆண்டில் 30-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் சொந்தநிதியில் இருந்து ரூ.1 கோடியை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஓர் ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்குமாறு கூறினார்.

அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவிக்கப்படுகிறது. அதன்படி,2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை, அதற்காக அமைக்கப்பட்ட குழு தேர்வுசெய்துள்ளது. அபி (கவிதை), இராசேந்திர சோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா (பிற இந்திய மொழி – காஷ்மீரி) ஆகியோருக்கு கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் சேர்த்து நடத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in