

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மாலை 3 மணி நேரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1,18,950 ரொக்கப் பணம் சிக்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை சோதனைச் சாவடி, ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி ஆகியவற்றில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே பண்டாரபுரத்தில் உள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையில் ஆய்வாளர்கள் பெஞ்சமின், ஸ்ரீகுமார் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அடங்கிய குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலரின் அறைக்கு நுழைந்தனர்.
அந்நேரத்தில் அங்கு நின்ற பணியாளர்கள், புரோக்கர்கள் வெளியே ஓட முயன்றனர். அவர்களை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலரின் அறை அருகே நிறுத்தினர்.
லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வருவதை அறிந்த புரோக்கர்கள் பலர் தங்களிடம் இருந்த வாகனங்களுக்கான ஆர்.சி.புத்தகம், மற்றும் விண்ணப்பத்திற்கான ஆவணங்கள், பணம் போன்றவற்றை ஜன்னல் வழியாக வீசி எறிந்தனர். அவற்றை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகரிடமும், அவரது மேஜை, பீரோ போன்றவற்றில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கிருந்த கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைப்போல் பக்கத்து அறைகள், மற்றும் அலுவலக வளாகம், ஜன்னல் பகுதிகள், அலுவலகத்தின் வெளியே புதர்ப் பகுதிகளில் வீசி எறியப்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 3 மணி நேரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூ.1,18,950 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர், மற்றும் புரோக்கர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக போலீஸ் சோதனைச் சாவடி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையால் அரசுத்துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.