உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு நாளை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
2 min read

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அதிமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு நாளை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவை தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரதான எதிர்க்கட்சியின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செப். 30) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் தொடர்ச்சிதான் இது எனவும், கடந்த தேர்தலின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்த தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் நேரடி வெப் காஸ்டிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றில் ஒரு வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும், வாக்குப் பெட்டிகளை, ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்வதையும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டு செல்வதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போட வேண்டும் என்று கூறிய அவர், இந்த அம்சங்கள் பற்றி மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றும், கிராமங்களில் வீடியோ பதிவு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

வெறும் ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால், என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை பதில் அளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை (அக். 01) தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in