ஜோலார்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்: ஆட்சியர் நடவடிக்கை
ஜோலார்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. 4 பதவிகளுக்கான இத்தேர்தலில் மாவட்டம் முழுவதும் 6,307 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜோலார்பேட்டை ஒன்றியம் சோமநாயக்கன்பட்டி ஊராட்சிச்செயலாளராக பணியாற்றி வரும் சுந்தரமூர்த்தி என்பவர் தேர்தலில் போட்டியிடும் குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதைதொடர்ந்து, ஊராட்சிச்செயலாளர் சுந்தரமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும், அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரித்துள்ளார்.
