ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை: தடை விதிக்கக் கோரிய மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம்; மனு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி அதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப். 29) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால், அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், இந்த அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முழுமையான விவரங்கள் இல்லாமல் மனுத்தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், 2 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்குத் தொடர மனுதாரருக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in