Last Updated : 29 Sep, 2021 03:20 AM

 

Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

கஞ்சா வியாபாரி என முத்திரை குத்தியதால் - மஜக பிரமுகர் வசீம் அக்ரமை கொலை செய்தேன்: போலீஸாரிடம் ‘டீல் இம்தியாஸ்’ வாக்குமூலம்

போலீஸ் காவல் முடிந்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நேற்று சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட டீல் இம்தியாஸ்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் செல்வாக்குடன் வலம் வந்த என்னை, கஞ்சா வியாபாரி என அவதூறு பரப்பி அவமானப்படுத்தியதால் மஜக பிரமுகர் வசீம்அக்ரமை கொலை செய்ததாக ‘டீல் இம்தியாஸ்’ போலீஸாரின் விசாரணையில் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஜக பிரமுகர் வசீம்அக்ரம்(42). இவர்,கடந்த 10-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புஉடைய வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த ‘டீல் இம்தியாஸ்’ மற்றும் அவரது கூட்டாளிகளான செல்வகுமார், அகஸ்டின், அஜய், பிரவீன்குமார், முனீஸ்வரன், சத்தியசீலன் ஆகிய 7 பேரும் செப்டம்பர் 15-ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையடுத்து, வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 24-ம் தேதி ‘டீல் இம்தியாஸ்’ உட்பட 7 பேரும் நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வசீம்அக்ரம் கொலை வழக்கில் 7 பேரிடம் விசாரணை நடத்த 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு வாணியம்பாடி நகர போலீஸார் மனு அளித்தனர்.

இந்த மனுவை ஏற்ற நீதிபதி காளிமுத்துவேல் 7 பேருக்கும் 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 பேரையும் விசாரணைக்காக வாணியம்பாடி நகர போலீஸார் அழைத்துச் சென்றனர். 3 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் ‘டீல் இம்தியாஸ்’ போலீஸாரிடம் கூறியதாவது:

வாணியம்பாடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு வியாபாரம் செய்து வந்தேன். கொலை செய்யப்பட்ட வசீம்அக்ரம் எனக்கு சிறு வயது முதல் நெருங்கிய நண்பர். சமூக சேவைகளை செய்துசமுதாயத்தில் அந்தஸ்த்துடன் இருந்தேன்.

வசீம்அக்ரம்தான் காரணம்

எனது வளர்ச்சி வசீம்அக்ரமுக்கு பிடிக்கவில்லை என்பதைஅறிந்தேன். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் எனது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் கஞ்சா வைத்திருப்பதாக சோதனை நடத்தினர். இதற்கெல்லாம் வசீம்அக்ரம்தான் காரணம் என்பது எனக்கு தெரியவந்தது.

இதனால், வசீம்அக்ரமை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டா மணி (எ) மணிகண்டன் மற்றும் செல்வகுமார், அகஸ்டீன், அஜய், முனீஸ்வரன் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கடந்த 10-ம் தேதி வசீம்அக்ரம் தனியாக வந்தபோது கொலை செய்தேன். பின்னர், கொலையில் தொடர்புடையவர்கள் தஞ்சாவூர் மற்றும் சிவகாசி நீதிமன்றங்களில் சரணடைந்தோம் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், வசீம்அக்ரம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தோட்டா மணி (எ) மணிகண்டன் கடந்த 21-ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், போலீஸ் காவல் முடிந்த டீல் இம்தியாஸ் உட்பட 7 பேரும் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி காளிமுத்துவேல் உத்தரவிட்டதை தொடர்ந்து டீல் இம்தியாஸ் சேலம் சிறையிலும், மற்ற 6 பேரும் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

வசீம்அக்ரம் கொலை வழக்கில் பயன்படுத்திய ஆயுதங்கள் என சிலவற்றை நீதிமன்றத்தில் வாணியம்பாடி போலீஸார் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x