Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ.முகமது ரஸ்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களைவிட கரோனாகாலத்தில் இணைய சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் இணையதளத்தில் பல்வேறு விளையாட்டுகளை அறிமுகம் செய்துள்ளன. ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்தால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விளையாட்டுகளில் லட்சக்கணக்கான பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகளை கொண்டு விளம்பரம் செய்கின்றனர். இதைநம்பி இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழக்கின்றனர். எனவே, ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதித்தும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு நிரந்தரமாக தடை விதிப்பது தொடர்பாக உரிய சட்டத்திருத்தங்களை கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும்.

மேலும் ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, சவ்ரவ் கங்குலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும்நடிகை தமண்ணா மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டு இருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன்சூதாட்டத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. மீறுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. அசாம், ஒடிசா, நாகாலாந்து மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டவிளையாட்டுகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவெடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.பின்னர் தலைமை நீதிபதி, மனுதாரர் கோரிக்கை தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது. மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து நிவாரணம் தேடியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x