Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM
சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்மையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் மோரூரில் பேருந்து நிலையம் அருகில் பொது இடத்தில் விசிக கொடியேற்ற காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அரசியல்கட்சிகள், ஜாதி சங்கங்கள், ரசிகர் மன்றங்களின் கொடிகள் பறக்கும்போது, விசிக கொடியை மட்டும் ஏற்ற அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
விசிக கொடியேற்ற வந்த பொதுமக்கள், பெண்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி 17 பேரை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் விசிக கொடியேற்ற அனுமதி மறுத்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் விசிகவை ஒடுக்குவதிலேயே காவல் துறையினர் முனைப்பாகஉள்ளனர். விசிகவை நசுக்கும்காவல் துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT