

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், துறை ஆய்வாளர்கள், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர், சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டோர் ஈரோடு - சத்தி சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒரு கடையில் 18 வயது பூர்த்தியடையாத இருவர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தைத் தொழிலாளரை பணியில் அமர்த்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் கூறியதாவது:
கடைகள், தொழிலகங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதைக் கண்டால், பொதுமக்கள், 1908 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என்றார்.