கொலை வழக்கில் தேடப்பட்டவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கைது செய்யப்பட்ட சந்திரமோகன்.
கைது செய்யப்பட்ட சந்திரமோகன்.
Updated on
1 min read

சூரங்குடியை அடுத்த வேம்பார்தருவை பாலத்தின் அருகே கடந்த 18.02.1995 அன்று அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் (40) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சூரங்குடி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, 20.02.1995 அன்று குற்றவாளிகளை கைது செய்தனர். இவ்வழக்கில் 14.05.1996-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவரான தூத்துக்குடி பச்சையாபுரத்தைச் சேர்ந்த சந்திரமோகன் (72) என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து 7.06.1999 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சந்திர மோகனை கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் கங்கை நாதபாண்டியன் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் தீவிரமாகத் தேடி தலைமறைவாக இருந்தசந்திரமோகனை கைது செய்தனர். தனிப்படையினரை எஸ்.பி. பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in