Last Updated : 28 Sep, 2021 04:25 PM

 

Published : 28 Sep 2021 04:25 PM
Last Updated : 28 Sep 2021 04:25 PM

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்: நேரில் ஆஜராக உத்தரவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சோதனை நடத்தினர்.

கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீடு, விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இச்சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களைப் பறிமுதல் செய்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீத சொத்துகளைச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாகத் தெரிவித்தவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்தபோது வரவு-செலவுகளை ஆராய்ந்ததில், இந்தத் தகவல் வெளிவந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுதினம், செப்.30-ம் தேதி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, அவரது மனைவி மற்றும் சகோதரருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x