

"கடிதம் எழுதுவது மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்துள்ளது. நமக்கு வேண்டியோரிடம் மனம் விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.
புதுச்சேரி தலைமை தபால்நிலையம் சார்பில் வெளியிடப்படும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சென்னை மண்டல அஞ்சல்துறை இயக்குனர் சோமசுந்தரம், சென்னை நகர அஞ்சல்துறை தலைமை அதிகாரி வீணா ஸ்ரீநிவாஸ், புதுவை தலைமை தபால்நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
.அஞ்சல் உறைகளை வெளியிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியதாவது:
"புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து அவற்றை பிரபலப்படுத்துவதாகும். புவிசார் குறியீடு பெற்றுள்ள, புதுவையில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகித கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது.
கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. கடிதம் மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்து இருக்கிறது. வரலாறு படைத்திருக்கிறது. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்கு வேண்டியவர்களிடம் மனம்விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தில் கடிதங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன.
கரோனா பெருந்தொற்று, கை-கால்கள் கழுவுவது போன்ற நம் முன்னோர்களின் சில பழக்க-வழக்கங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம்" என்று குறிப்பிட்டார்.