

பட்டாசு தொழிற்சாலைகள், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளியை முன்னிட்டு அதிகஅளவு பட்டாசு உற்பத்தி செய்யவேண்டியதுள்ளதால், பாதுகாப்பாக உற்பத்தி பணியை மேற்கொண்டு, வரும் தீபாவளியை விபத்தில்லா பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், உரிமத்தில் எவ்வகையான பட்டாசுகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ, அத்தகைய பட்டாசுகளை மட்டுமேஉற்பத்தி செய்ய வேண்டும். பட்டாசு உற்பத்தியில் மீதமுள்ளமருந்து கலவையை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். ஒரு அறையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை கொண்டு மட்டுமே உற்பத்தி மேற்கொள்ள வேண்டும். மருந்து கலவையை தயாரித்த உடனே செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இரும்பிலான பொருட்களை உற்பத்தியில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை அதற்கெனஉள்ள உலர் மேடையில் காயவைக்க வேண்டும். மரத்தடியில் அமர்ந்து உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் உற்பத்தி செய்யக்கூடாது. சரக்கு வாகனத்தை பணி அறைக்கு கொண்டு செல்லக்கூடாது. கழிவு பட்டாசுகளை அன்றே அகற்றி கரிகுழியில் எரிக்க வேண்டும். அலுவலக வளாகத்தின் மேகசின் பிரிவில் கிஃப்ட் பாக்கெட் போடும் பணியை மேற்கொள்ளக்கூடாது.
தொழிலாளர்கள் கைபேசியை எடுத்துச் செல்லக்கூடாது. மதுஅருந்தியவர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கக்கூடாது. பருத்தி ஆடைகளையே தொழிலாளர்கள் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.