

ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸ் பிரேம் குமாரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். முதல்வரின் கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திரே மோடி 5 ஆம் தேதி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "உங்களது கடிதம் கிடைத்தது. ஆப்கானிஸ்தானின் ஹெராத்தில் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் கடத்தப்பட்டது குறித்து நானும் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். அவரை இயன்றவரையில் விரைவாக மீட்க, ஆப்கானிஸ்தான் அரசாலும், ஹெராத்தில் உள்ள அதிகாரிகளாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், அதிபர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் காபூலில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர். தகவல்களை உடனுக்குடன் கேட்டறிகின்றனர்.
ஆப்கான் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன், நம்முடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேசினார். அப்போது, பாதிரியார் விடுவிக்கப்படுவதற்கு முழு உத்தரவாதத்தையும் ஆப்கன் அரசு அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.
பாதிரியாருக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயன்றவரையில் விரைவாக மீட்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு துரிதமாக மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இந்த விவகாரத்தை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன்" என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.