

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் முறையாக பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பணிபுரியும் நீதிபதிகளில் ஓய்வு பெற்றால் அந்த நீதிபதி ஓய்வு பெறும் நாளில் சென்னையில் தலைமை நீதிபதியுடன் ஒரே அமர்வில் வழக்குகளை விசாரிப்பதும், பின்னர் சென்னையில் உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்படுவது வழக்கம்.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை தொடங்கி 17 ஆண்டுகள் ஆகின்றது. இருப்பினும் இதுவரை உயர் நீதிமன்றக் கிளையில் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது இல்லை.
முதல் முறையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு இன்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்தார்.
முன்னதாக தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பேசியதாவது:
நீதிபதி கிருஷ்ணவள்ளி நெல்லையைச் சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 31.1.1985-ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். வழக்கறிஞர் மங்கள எஸ்.ஜவஹர்லாலிடம் ஜூனியராக பணிபுரிந்தார். நீதித்துறை தேர்வில் வெற்றிப்பெற்று 1991-ல் திருச்சி 2வது கூடுதல் மாவட்ட முன்சீப்பாக நியமிக்கப்பட்டார். 26 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிந்த நிலையில், 2017 டிசம்பர் 1-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு உயர் நீதிமன்ற பணியில் இதுவரை 10207 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். தனி விசாரணையில் 5226 வழக்குகளிலும், அமர்வு விசாரணையில் 4981 வழக்குகளிலும் தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி கிருஷ்ணவள்ளி ஏற்புரையில், தன்னை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்த பெற்றோர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், உறவினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
நிர்வாக நீதிபதி எம்.துரைசுவாமி மற்றும் நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கணொலி காட்சி வழியாக பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்றனர்.