Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.வி.வெங்கடாசலத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அப்பதவி, சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல்பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்கு பல ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். அதன் பின்னர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்கள் கூடுதல் பொறுப்பாக வாரியத் தலைவர் பதவி வகித்து வந்தனர்.

இதற்கிடையில், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டில் அனுபவம் மிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அல்லது ஐஎஃப்எஸ் அதிகாரிகளை வாரியத் தலைவராக நியமிக்கலாம் என தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி ஏ.வி.வெங்கடாசலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். இப்பதவிக்காலம் ஓராண்டாகும். அதன் பின்னர் 2020-ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஓராண்டு காலம் பதவியை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது.

இவர், கடந்த 1988-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து, வனத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியஉறுப்பினர் செயலர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய உறுப்பினர் செயலர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

இவரது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்காலம் செப்.25-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இவரது இல்லம்உள்ளிட்ட இவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்நிலையில், அப்பதவி, சுற்றுச்சூழல், வனத்துறைசெயலர் சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x