Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

உள்ளாட்சி தேர்தலையொட்டி கமல் இன்றுமுதல் பிரச்சாரம்

சென்னை

தமிழகத்தில் விடுபட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும்அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கியக் கொள்கைகளுள் ஒன்று. இந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டுக்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாற்றத்தின் பிரதிநிதிகளாக, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தமிழகமெங்கும் போட்டியிடுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல்கொடுப்பதற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் “உள்ளாட்சி - உரிமைக்குரல்” முதற்கட்ட பரப்புரைப் பயணத்தை, திங்கட்கிழமை (இன்று) காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து தொடங்குகிறார். வரும் 30-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தைத் தொடர்கிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x