Published : 26 Sep 2021 06:34 PM
Last Updated : 26 Sep 2021 06:34 PM

202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

4 மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே திமுக அரசாகத் தான் இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் முதல்வர். ஆனால் மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தார்களோ அதை நிறைவேற்றவில்லை என்பதே மக்களின் ஆதங்கமாக இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 70 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகளை நம்பித்தான் பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். அதனால் தான், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

இந்த வாக்குறுதிகளில் ரூ.4000 நிவாரணத் தொகை, உள்ளூர் பேருந்துகளில் மகளிர்க்கு இலவசப் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ஆகிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி ஆகியனவும் திரும்ப வழங்கப்படவில்லை. உள்ளதும் போச்சு என்ற நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகின்றனர்.

மூன்று வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருப்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை எல்லாம் மக்கள் சாதனையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

திமுகவில் கல்விக் கடன் ரத்து வாக்குறுதியை நம்பி பெருவாரியான மக்கள் வாக்களித்தார்கள். இன்றைக்கு அந்தக் கடனுக்கான வட்டி அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

எனவே முதல்வர் மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு வாக்களித்தனரோ அதை நிறைவேற்ற, பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஏழை எளிய மாணவ மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x