

புதுச்சேரியில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (செப். 26)வெளியிட்ட தகவலில்: புதுச்சேரி மாநிலத்தில் 4,677 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-50, காரைக்கால்- 19, மாஹே- 9 பேர் என மொத்தம் 78 பேருக்கு (1.67 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஏனாமில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 119 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 782 பேரும் என 901 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி திருபுவனை வள்ளலார் நகரைச் சேர்ந்த 55 வயது ஆண், காரைக்கால் முருகராம் நகரைச் சேர்ந்த 57 வயது ஆண் என 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது. புதிதாக 107 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 351 (97.83 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்து 71 ஆயிரத்து 937 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.