Published : 26 Sep 2021 03:02 PM
Last Updated : 26 Sep 2021 03:02 PM

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீடுகளுக்கே சென்று அழைப்பு விடுத்த கரூர் ஆட்சியர்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீடுகளுக்கே சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

கரூர் மாவட்டத்தில் 3ம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (செப். 26ம் தேதி) நடைபெறுகிறது.

619 முகாம்கள், 5 நடமாடும் முகாம்கள் என 624 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. இதில் 3,744 பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9,03,245. இதில் முதல் தவணை மட்டும் செலுத்தியவர்கள் 4,47,347 இரு தவணைகளும் செலுத்திக் கொண்டவர்கள் 1,25,351 பேர் என மொத்தம் 5,72,698 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதில் 18 வயது முதல் 44 வயதுள்ள 5,58,359 பேரில் 4,21,683 என 78 சதவீதம், 45 வயதிற்கு மேற்பட்டோர் 3,44,886 பேரில் 2,71,353 பேர் என 79 சதவீதம், கருவுற்ற தாய்மார்கள் 9,752 பேரில் 8,229 கர்ப்பிணிகள் என 84 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் 6,514 பேரில் 5,428 பேர் என 83 சதவீதம், தொழில் நிறுவனங்களில் 93,859 பேரில் 59,930 பேர் என 64 சதவீதம், பெருந்தொழில் நிறுவனங்களில் 19,545 பேரில் 18,842 என 96 சதவீதம், பாலூட்டும் தாய்மார்களில் 5,965 பேர் இலக்கு நிர்ணயிககப்பட்டு 8,309 பேர் என 139 சதவீதம் பேருக்கு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 3,30,547 பேருக்கு முதல் தவணையும், 4,47,347 பேருக்கு 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தவேண்டும். இன்றைய முகாமில் சுமார் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் வீடுகளுக்கே மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

முதியவர் ஒருவர் சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவிக்க, சர்க்கரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனக்கூறி அவரிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

தோகைமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் வீடுகளுக்கே சுகாதாரத்துறை உள்ளிட்ட ஊழியர்கள் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினர். தளவாபாளையம் பகுதியில் செவிலியர்கள் மற்றும் குழந்தைள் நல மைய பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினர்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வட்டார அளவில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் தகவல்கள் வேலாயும்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் சேகரிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x