அதிமுகவினரிடையே மோதல் விவகாரம்- ராஜேந்திரபாலாஜி உட்பட 15 பேர் மீது வழக்கு

அதிமுகவினரிடையே மோதல் விவகாரம்- ராஜேந்திரபாலாஜி உட்பட 15 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் வழியாக தென்காசி, நெல்லை சென்றார்.

சாத்தூரில் கிழக்கு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமையில் அவருக்கு வரவேற்பு தரப்பட்டது. அப்போது, ஏற்பட்ட தகராறில்,ஏ.ராமலிங்காபுரம் கிளைச் செயலர் வீரோவுரெட்டி (59) என்பவரைமுன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்கள் தாக்கினர். அப்போது, ஒன்றியச் செயலர் சண்முகக்கனி உள்ளிட்டோர் அவர்களை திருப்பித் தாக்கினர்.

இச்சம்பவம் குறித்து, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வீரோவுரெட்டி கொடுத்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அவரதுஆதரவாளர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டையை சேர்ந்த அதிமுக நகரச் செயலர் இளங்கோவன் தந்த புகாரின்பேரில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலர் சண்முகக்கனி, அவரது தம்பி ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன், ராஜா ஆகியோர் மீது சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in