Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யும் வகையில், மது விற்பனை செய்வதற்கு முன்னர் அவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை அறியும் பணியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கோவை மண்டல டாஸ்மாக் மேலாளர் கோவிந்தராஜூலு கூறும்போது, ‘‘மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, கோவையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளீர்களா என ஊழியர்கள் மூலம் கேட்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியதாக கூறினால், மது விற்கப்படுகிறது. இல்லையென்றால், அவர்களது செல்போன் எண், பெயர், முகவரியை வாங்கிய பின்னர் மது விற்கின்றனர். அந்த எண் மாவட்ட டாஸ்மாக் அலுவலக ஊழியர்கள் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சுகாதாரத்துறையினர் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த 4 நாட்களாக கோவை மாவட்டத்தில் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது,’’ என்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது,‘‘ டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்க வருபவர்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என்ற முறையை அமல்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT