Published : 20 Jan 2014 10:20 AM
Last Updated : 20 Jan 2014 10:20 AM

தமிழகத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி- சென்னையில் பிரகாஷ் பூஷண் அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் கூறினார்.

சென்னை வளசரவாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். இதில் 32 மாவட்ட நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிருபர்களிடம் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:

டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு பலரும் ஆம் ஆத்மி கட்சியில் சேர ஆர்வம் காட்டி வருகின் றனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேரை புதிதாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

வரும் நாடாளுமன்ற தேர்த லில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. தமிழகத் திலும் தனித்துப் போட்டியிட உள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டி, வேட்பாளர் பெயர்கள் ஆகிய விவரங்கள் பிப்ரவரி கடைசியில் அறிவிக்கப்படும்.

திமுக, அதிமுக ஆகியவை ஊழல் நிறைந்த கட்சிகளாக உள்ளன. கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் கூறிவருகிறார். கருப்பு பணத்தை மீட்க முடியும். ஆனால், நாட்டில் உள்ள ஊழலை ஒழிக்க முடியுமா? ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் ஊழல் குறித்துப் பேச அரசியல் கட்சிகளே முன்வருவதில்லை. ஏனென்றால் பெரிய நிறுவனங்களை சார்ந்து தான் சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய இந்தியா தவறிவிட்டது. இதுபோல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தவும் இந்திய அரசு தவறிவிட்டது.

இவ்வாறு பிரசாந்த் பூஷண் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவில் இருந்து கே.பி.ராராயணன், எம்.கிருஷ்ணமூர்த்தி, கே.பாலகிருஷ்ணன், நஸ்ரின் சஸ்தா மீனா, ஒய்.அருள்தாஸ் ஆகிய 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை பேட்டியின்போதும் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன் தலைமை யில் 50 பேர் திடீரென திரண்டு பிரசாந்த் பூஷணை சந்திக்க முயன்றனர். கட்சித் தொண்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x