திண்டுக்கல் இரட்டை கொலை வழக்கில் கார் ஓட்டுநரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் இரட்டை கொலை வழக்கில் கார் ஓட்டுநரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இரட்டைக் கொலை மற்றும் சிறுமி கடத்தல் வழக்கில் கார் ஓட்டுநருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், அப்பகுதியில் பள்ளி நடத்தி வந்தார். அவர் தனது மகளுடன் பண்ணை வீட்டில் வசித்தார்.

இவர்களது கார் ஓட்டுநராக திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் பணியாற்றினார். 22.3.2014-ல் அந்த பெண்ணும், அவரது உறவினர் செந்தில்குமார் என்பவரும் பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த ரூ.23 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

அந்த பெண்ணின் மகளான பள்ளி மாணவியும் கடத்தப்பட்டி ருந்தார். இதே நேரம் ஓட்டுநர் காளீஸ்வரனும் மாயமானார்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக பழநி தாலுகா போலீஸார் விசாரித்தனர்.

சிறுமியைக் கடத்தி வைத்திருந்த நிலையில் காளீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் சிறுமியை பல்வேறு இடங்க ளுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் காளீஸ்வரனுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து 2017-ல் திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து காளீஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in