Published : 25 Sep 2021 02:18 PM
Last Updated : 25 Sep 2021 02:18 PM

யூபிஎஸ்சி; தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

சென்னை

யூபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு உண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் அரசு வழங்கும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

யூபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இளங்கலைப் பட்டம் முடித்திருப்பது தேர்வை எதிர்கொள்ள அடிப்படைத் தகுதியாக உள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. முதலிடத்தை சுபம் குமாரும், இரண்டாம் இடத்தை ஜக்ரதி அவஸ்தியும் மூன்றாம் இடத்தை அங்கிதா ஜெயினும் பெற்றுள்ளனர். கோயைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் தேர்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி உள்ளோருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள்; சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள்.

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் தேர்வுபெற்றதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள்.

வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்கு உண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x