

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
"தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்பலனாக, 70 ரவுடிகள் பிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து 43 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களில் 33 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 6 நபர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச-ன்படி சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஓராண்டுக்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்.
மீதமுள்ள 31 ரவுடிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் குற்றச்செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.