Last Updated : 25 Sep, 2021 03:32 AM

 

Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கிறது: நாடாளுமன்றத்தில் பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கும் திமுக

சென்னை

மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் 3-வது பெரிய கட்சியாக இருந்தது. அக்கட்சிக்கு மக்களவையில் 22,மாநிலங்களவையில் 11 என்று33 எம்.பி.க்கள் இருந்தனர். மக்களவையில் 24, மாநிலங்களவையில் 7 என்று 31 எம்.பி.க்களுடன் 4-வது பெரிய கட்சியாக திமுக இருந்தது.

இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் முகமத்ஜான் மறைவு,கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ராஜினாமாவால் தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாகின. முகமத்ஜான் மறைவால் காலியான இடத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா கடந்த 3-ம் தேதிபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ராஜினாமாவால் காலியான இடங்களுக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஸ்குமார் ஆகியஇருவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதனால், மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரிக்கிறது. மக்களவையில் திமுகவுக்கு 24 எம்.பி.க்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் திமுகவின் பலம் 34 ஆக உயர்கிறது. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது.

தற்போது மக்களவையில் 301, மாநிலங்களவையில் 94 என்று 395 எம்.பி.க்களுடன் பாஜக முதலிடத்திலும், மக்களவையில் 52, மாநிலங்களவையில் 33 என்று 85 எம்.பி.க்களுடன் காங்கிரஸ் 2-வது இடத்திலும் உள்ளன.

திரிணமூல் கட்சியுடன் சம இடம்

மக்களவையில் 22, மாநிலங்களவையில் 12 என 34 எம்.பி.க்களுடன் திரிணமூல் காங்கிரஸ் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், மக்களவையில் 24, மாநிலங்களவையில் 10 என 34 எம்.பி.க்களுடன் அதற்கு சமமான இடத்தை திமுக பிடிக்கிறது.

மக்களவையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை உள்ளதால் மற்ற கட்சிகளால் நெருக்கடி கொடுக்க முடியாது. ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் உதவியை பாஜக பெற்று வந்தது. குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களையும் இக்கட்சிகளின் ஆதரவுடன்தான் பாஜக அரசு நிறைவேற்றியது.

சிந்தாந்த அடிப்படையில் பாஜகவுக்கு நேர் எதிரான கட்சியான திமுக, அனைத்து விஷயங்களிலும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வரும் நிலையில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x