Last Updated : 24 Sep, 2021 07:11 PM

 

Published : 24 Sep 2021 07:11 PM
Last Updated : 24 Sep 2021 07:11 PM

தந்தை, மகனுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு: தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞரின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் கைதான தந்தை, மகனுக்காக நாகர்கோவில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பது குறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் விஜய் சாரதி. வழக்கறிஞர் ஒருவரின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் தந்தை, மகன் இருவரையும் தெற்கு தாமரைகுளம் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இருவரும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், ''எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் வழக்கறிஞர். அவர் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க உறுப்பினராக உள்ளார். இதனால் எங்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யாமல் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவு:

''மனுதாரர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நபர், மருத்துவமனை சென்றதாகவோ, சிகிச்சை பெற்றதாகவோ ஆதாரம் இல்லை. மனுதாரர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நபர் இருக்கும்போது அவர் சகோதரர் ஏன் புகார் அளித்தார் எனத் தெரியவில்லை. அதேபோல் தனிப்பட்ட பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர் ஜாமீன் பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என எப்படி வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்பது தெரியவில்லை.

இதனால் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கிறது. இவர்கள் இருவரும், தெற்கு தாமரைகுளம் காவல் ஆய்வாளரும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு அக்.25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

பின்னர் விசாரணை அக்.1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x