Published : 24 Sep 2021 06:49 PM
Last Updated : 24 Sep 2021 06:49 PM

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; ஆணவப் படுகொலை தடுப்புக்கென தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை

சாதி ஆவணக் கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

மேலும், ஆணவப் படுகொலை தடுப்புக்கென தனிச் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்திற்கு அருகில் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான சாதி ஆணவக் கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை வழக்கில் கடலூர் எஸ்.சி., / எஸ்.டி. நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வரவேற்பையும், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி எஸ்.உத்தமராஜுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

பட்டியலின வகுப்பைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி முருகேசன் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 05.05.2003 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். கண்ணகியினுடைய உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து 8.7.2003 அன்று ஊருக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இருவரையும் பட்டப்பகலில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று இருவருடைய வாயிலும், காதுகளிலும் விஷத்தை ஊற்றி அதிகாலை 5.30 மணியளவில் படுகொலை செய்து பிணங்களை எரித்துவிட்டனர்.

இத்தகைய கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்து விடுங்கள் என அவர்கள் கதறி அழுதது யார் காதிலும் விழவில்லை. எங்களைப் பிரித்து கண்ணகியை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்துவிடுங்கள் என்ற முருகேசனின் கதறலையும் செவி கொடுக்காமல், ஏராளமானோர் திரண்டு நிற்க, அவர்கள் முன்னிலையில் இளம் தம்பதியினரைக் கொடூரமாகக் கொலை செய்து, தீ வைத்துக் கொளுத்திய கொடுமை அரங்கேற்றப்பட்டது.

இவ்வளவையும் செய்ததோடு காவல்துறையினரின் உதவியைப் பயன்படுத்தி முருகேசனுடைய தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்ட நான்கு பேர் முருகேசனை விஷம் கொடுத்துக் கொன்றதாகவும், கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் கண்ணகிக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகவும் பொய் வழக்குப் பதிவு செய்து எட்டுப் பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்திடவும், பொய் வழக்கினை ரத்து செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாச்சலம் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. முருகேசனுடைய தந்தை சார்பில் வழக்கறிஞர்கள் ரத்தினம் மற்றும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு இவ்வழக்கு 22.04.2004 அன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து வழக்கறிஞருடைய வற்புறுத்தலால் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் ஏற்கெனவே பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்து கண்ணகியினுடைய உறவினர்கள் 11 பேர் மீதும், பொய் வழக்குப் போட்டு வழக்கை திசைதிருப்பவும், சாட்சிகளை மறைக்கவும் உதவி செய்த உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு, எஸ்.சி / எஸ்.டி வழக்குப் பதிவு செய்து சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதிலும் முருகேசனுடைய உறவினரான அய்யாசாமி, குணசேகரன் ஆகியோரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கூடாது என்பதை சிபிஐ அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக செங்கல்பட்டு சிபிஐ நீதிமன்றத்திலும், கடலூர் எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்திலும் நடைபெற்றது. குற்றவாளிகள் வழக்கை நடத்தவிடாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தனர். சாட்சிகளைக் கலைப்பதற்கும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தமது முழு அதிகாரங்களைப் பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டி கலைப்பதற்கு முயன்றனர். இவர்களுக்கு அடிபணிந்து சிலர் பிறழ் சாட்சியாகவும் மாறினார்கள்.

செல்வராஜ் என்ற நேரடி சாட்சி இவர்களின் மிரட்டலால் பணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியை அளிப்பதற்கு முதல் நாள் 31.08.2017 அன்று தற்கொலை செய்துகொண்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மிரட்டலால் தனது கணவர் தற்கொலை செய்துகொண்டார் என செல்வராஜின் மனைவி அளித்த புகாரின் மீது விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போதுமான ஆதாரங்கள் இல்லை என விருத்தாச்சலம் காவல்துறை வழக்கை முடித்துவிட்டது.

பல தடைகளைக் கடந்து இன்று (24.09.2021) கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனையும், மற்ற 11 பேருக்கு கிரிமினல் சதி செய்தது, கொலை செய்தது, வன்கொடுமை இழைத்தது என்கிற அடிப்படையில் மூன்று ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயன்ற போலீஸாருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முருகேசனுடைய உறவினர் இரண்டு பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அனைத்து குற்றவாளிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் அபராதம் விதித்ததோடு ஏற்கெனவே காவல்துறையினரால் பொய் வழக்குப் புனையப்பட்டு, கைது செய்யப்பட்ட முருகேசனின் உறவினர்கள் 3 பேருக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சாதிய வன்மத்தோடு நடத்தப்பட்ட ஆணவப் படுகொலை வழக்கு என்பதோடு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். இவ்வழக்கில் தொடர்ந்து கண்காணித்து உதவிய வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், கோ.சுகுமாறன் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் தொடர்ந்து வரும் இத்தகைய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு ஆணவப் படுகொலை தடுப்புக்கென தனிச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகிறோம்.

உசிலம்பட்டி விமலாதேவி ஆணவக் கொலை வழக்கில் நீதியரசர் வி.ஆர். சுப்பிரமணியம் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டுமெனவும் முன்வைக்கிறோம். மேலும் அடித்தட்டு கிராமப்புற உழைப்பாளி மக்களான பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மோதல்களில் ஈடுபடாமல் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x