Published : 24 Sep 2021 04:19 PM
Last Updated : 24 Sep 2021 04:19 PM

14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

மத்தியக் கிழக்கு வங்கக் கடல்‌ பகுதியில்‌ குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்‌ என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர்‌ பா.கீதா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக

24.09.2021, 25.09.2021:

தமிழ்நாடு, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, சேலம்‌, திருப்பூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல்‌, தேனி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும்‌.

26.09.2021 முதல்‌ 28.09.2021 வரை:

தமிழ்நாடு, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

இன்று (24.09.2021) மத்தியக் கிழக்கு வங்கக் கடல்‌ பகுதியில்‌ குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில்‌ ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

24.09.2021 முதல்‌ 26.09.2021 வரை: பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ குமரிக் கடல்‌, தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு வங்கக் கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x