Published : 24 Sep 2021 11:48 AM
Last Updated : 24 Sep 2021 11:48 AM

கோடநாடு வழக்கு: வாளையாறு மனோஜுக்கு மீண்டும் நிபந்தனை தளர்த்தி ஜாமீன்

வாளையாறு மனோஜ்: கோப்புப்படம்

உதகை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரான வாளையாறு மனோஜுக்கு மீண்டும் நிபந்தனை தளர்த்தி ஜாமீன் வழங்கப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரான வாளையாறு மனோஜுக்குக் கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கிய நிலையில், அவருக்கு உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வரவில்லை. இதனால், நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, அவரது வழக்கறிஞர் முனிரத்னம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, நீலகிரி மற்றும் கோவையில் இருந்து ஜாமீன் உத்தரவாதம் அளிக்க யாரும் இல்லாத நிலை இருப்பதால், கேரளாவில் இருந்து வாளையாறு மனோஜின் உறவினர்கள் ரூ.50 ஆயிரம் சொத்து மதிப்பை உத்தரவாதமாக சொத்து ஆவணம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனக் கடந்த 14-ம் தேதி உத்தரவிட்டார்.

இதனால், வாளையாறு மனோஜின் மனைவி மற்றும் மனைவியின் சகோதரி உத்தரவாதம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், மனைவியின் சகோதரி உத்தரவாதம் அளிக்க முடியாது எனக் கூறிய நிலையில், மீண்டும் ஜாமீனில் தளர்வு கோரி வாளையாறு மனோஜின் வழக்கறிஞர் முனிரத்னம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா மீண்டும் ஜாமீனில் தளர்வு அளித்து இன்று (செப். 24) உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் முனிரத்னம் கூறும்போது, "நிபந்தனை தளர்த்தப்பட்டது. அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனோஜின் மனைவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் பிணையாளராக இருக்க வேண்டும் என, நீதிமன்றம் நிபந்தனையைத் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x