Published : 05 Mar 2016 02:21 PM
Last Updated : 05 Mar 2016 02:21 PM

உதகையில் போட்டியிடும் முனைப்பில் காங்கிரஸ்?

நீலகிரி மாவட்டம் திமுக கோட்டையாகவே கருதப்படுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆதரவு அலையிலும், குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவை தொகுதிகளை திமுக கைப்பற்றியது. உதகை தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. உதகை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை அதிமுக வீழ்த்தியது.

கடந்த முறை இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், இம்முறை உதகை தொகுதியிலும் நேரடியாக களமிறங்கலாம் என தலைமையை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உதகை தொகுதியில் திமுக கடந்த 1996-ம் ஆண்டுதான் கடைசியாக நேரடியாக களமிறங்கியது. டி.குண்டன் வெற்றி பெற்றார்.

பின்னர் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நேர்காணலிலும் நிர்வாகிகள் இதை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் உதகை தொகுதியில் போட்டியிட்டு கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. திமுக கூட்டணியில் எப்போதும் உதகை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகிறது.

இம்முறையும் தொகுதியை கேட்டுப் பெறுவோம் என்கிறார் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கணேஷ். அவர் கூறும்போது, ‘உதகை தொகுதி காங்கிரஸின் கோட்டை. சுதந்திரம் பெற்றதிலிருந்து உதகை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வருகிறது.

கூட்டணியிலும் காங்கிரஸுக்குதான் உதகை தொகுதி ஒதுக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தபோதும், உதகை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

அதிமுகவுக்கு ஆதரவான அலை காரணமாக 7545 வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்தேன்’ என்றார்.

படுகர் காரணி

மாவட்டத்தில் சுமார் 40 சதவீத வாக்காளர்கள் படுகர்கள் எனவே, அரசியல் கட்சிகள் இவர்களின் வாக்குகளை கவர படுகரினத்தவரையே வேட்பாளர் களாக அறிவிக்கின்றனர்.

நேர்காணலில் பங்கேற்ற திமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘உதகை தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு உள்ளது என்பதால் சீட் கேட்டு விண்ணப்பித் திருந்தேன்.

நேர்காணலில் எனது விவரங்கள், வியூகம் ஆகியவற்றை கேட்டனர். இருப்பினும், படுகர் வேட்பாளர்கள் உள்ளனரா என கேள்வி எழுப்பினர்’ என்றார்.

உதகை தொகுதியில் படுகரினத்தவரே அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் நிலையில், தொகுதியில் மீண்டும் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் காங்கிரஸார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x