Published : 23 Sep 2021 12:56 PM
Last Updated : 23 Sep 2021 12:56 PM

கோடநாடு வழக்கு; சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் 2-ம் நாளாக விசாரணை: சதீசன், பிஜின்குட்டியும் ஆஜர்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான சந்தோஷ்சாமி மற்றும் 9-வது நபர் மனோஜ்சாமி ஆகியோரிடம் இரண்டாம் நாளாக இன்றும் விசாரணை தொடர்கிறது. குற்றம் சாட்டப்பட்ட 5-ம் நபரான சதீசன், மற்றும் 6-வது நபரான பிஜின்குட்டி ஆகியோர், ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான சந்தோஷ்சாமி மற்றும் 9-வது நபர் மனோஜ்சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று தனிப்படையினர் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் இருவரும் நேற்று பகல் 12.30 மணியளவில் தங்களது வழக்கறிஞர்கள் கே.விஜயன், முனிரத்னம் மற்றும் செந்திலுடன் விசாரணைக்காக உதகையில் உள்ள பழைய எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப்.23) ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி ஆகியோர் இரண்டாம் நாளாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5-வது நபரான சதீசன் மற்றும் 6-வது நபரான பிஜின்குட்டி ஆகியோர் விசாரணைக்கு இன்று ஆஜராகினர். அவர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், சுரேஷ், ஆய்வாளர் வேலுமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x