Published : 23 Sep 2021 12:26 PM
Last Updated : 23 Sep 2021 12:26 PM

குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா?- ஸ்டேட் வங்கித் தேர்வு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து விதிமுறைகள் மீறப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஸ்டேட் வங்கியின் தொடக்க நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை சு.வெங்கடேசன் எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''ஸ்டேட் வங்கி தொடக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020-ல் இருந்து இந்தப் பிரச்சினை குறித்து நிதி அமைச்சகம், சமூக நீதி அமைச்சகத்திற்குக் கடிதங்கள் அனுப்பி வருகிறேன். அவர்கள் அக்கடிதங்களை ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும் தாங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையைக் கடைப்பிடிப்பதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது.

22.10.2020, 27.11.2020, 11.12.2020, 28.12.2020, 07.01.2021 என வரிசையாக எனது கடிதங்கள், அமைச்சகம், ஸ்டேட் வங்கியின் பதில்களைப் பார்த்தால் அவையே இட ஒதுக்கீடு நெறிமுறைகளை அவர்கள் மீறுவதற்கு சாட்சியங்களாக உள்ளன.

ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களைத் தொடர்கின்றன. ஆகவே, பிரச்சினையின் வேர் அடையாளம் காணப்பட வேண்டும். மீண்டும் அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதுகிறேன். ஆனால், இந்தக் கடிதம் வழக்கம் போல ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்படுவதற்காக அல்ல. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா?

தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி, ஓபிசி, எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆஃப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீட்டுக் கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். பொதுப் பட்டியல் கட் ஆஃப்க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும்.

இதற்கு ஸ்டேட் வங்கி பதில் அளிக்க வேண்டாம். சமூக நீதி அமைச்சகம் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளில் கற்றுத் தேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதில் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும்.

இப்பிரச்சினையில் தீர்வு காணப்படும் வரையில் எனது முயற்சிகள் தொடரும். நாடாளுமன்றத்திலும் இதற்கான குரல் கேட்கும்''.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x