Published : 23 Sep 2021 11:02 AM
Last Updated : 23 Sep 2021 11:02 AM

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஒரு லட்சம் தமிழக விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த மானியக் கோரிக்கையில் வெளியான அறிவிப்புகளின் அடிப்படையில் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கக்கூடிய திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மின் இணைப்புக்காகப் பதிவு செய்துள்ள நிலையில், முதல் கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திட்டத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது:

“விவசாயிகளுக்கான ஒரு லட்சம் மின் இணைப்புகள் திட்டம் மகத்தானது. விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை. பொறுப்பை ஏற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சரியாகப் பராமரிக்கவில்லை. 19 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்குத்தான் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு மாதத்திலேயே விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம். தற்போது தமிழகத்தில் நடந்துவரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது.

தற்போது திமுக ஆட்சியில் அமைச்சர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். இதைவிட வேகமான ஆட்சி தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x