Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

சோதனையில் முடிந்த சோதனை ஓட்டம்; நீராவி இன்ஜின் பழுதானதால் நடுக்காட்டில் நின்ற மலை ரயில்

நீலகிரி மலை ரயில் இன்ஜின் உந்து சக்தி குறைவு காரணமாக 16 இடங்களில் நடுக்காட்டில் பழுதாகி நின்று, 13 மணி நேரத்துக்குப்பிறகு குன்னூர் வந்தடைந்தது.

இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட உபகரணங்களைக் கொண்டு நிலக்கரியால் இயங்கும் முதல் மலை ரயில் இன்ஜின் ரூ. 8.7 கோடி மதிப்பீட்டில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இன்ஜின், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு 3 பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மூன்று மணி நேரத்தில் பகல் 12 மணிக்கு குன்னூர் வந்தடைய வேண்டிய மலை ரயில், நடுக்காட்டில் 16 இடங்களில் பழுதாகி நின்றது.

பின்னர் ஒரு வழியாக 13 மணிநேர தாமதத்துக்கு, பின்னர் இரவு 11 மணியளவில் குன்னூர்வந்தடைந்தது. ரயில்வே ஊழியர்கள் கூறும் போது, ‘‘மலை ரயிலில் பயன்படுத்தப்படும் நிலக்கரி தரமற்றதாக இருந்ததால் இன்ஜினில் நீராவி உற்பத்தி திறன் குறைந்து, ரயிலின் உந்து சக்தியும் குறைந்தது. இதனால் ரயில் நடுவழியிலேயே பழுதாகி நின்றது’’ என்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால், நீலகிரி மலை ரயில் அடிக்கடி பழுதாகி, பாதி வழிலேயே நின்றதால், நிலக்கரி நீராவி இன்ஜின்கள் ‘பர்னஸ் ஆயில்’ மூலம் இயக்கப்படும் இன்ஜின்களாக மாற்றப்பட்டன. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம், கடும் சோதனையுடன் முடிவடைந்ததாக ரயில்வே ஊழியர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x