Last Updated : 22 Sep, 2021 05:21 PM

 

Published : 22 Sep 2021 05:21 PM
Last Updated : 22 Sep 2021 05:21 PM

புதுவையின் முதல் பாஜக எம்.பி.- செல்வகணபதிக்கு டிக் அடித்தது எப்படி?

புதுவை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவைச் சேர்ந்தவர் தேர்வாகிறார். இதில் செல்வகணபதியை பாஜக தேர்வு செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெற ஆளும் கட்சிக் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே மோதல் நிலவியது. முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.பி. பதவியைப் பெற முதல்வர் ரங்கசாமி மூலம் என்.ஆர்.காங்கிரஸில் பல முயற்சிகளை மேற்கொண்டார். பாஜக மேலிடம் நேரடியாகத் தலையிட்டதன் மூலம் மாநிலங்களவை எம்.பி. பதவி பாஜகவுக்குச் சென்றது.

இதன் பிறகும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த டாக்டர் நாராயணசாமியை, பாஜகவில் சேர்த்து அக்கட்சியின் எம்.பி. வேட்பாளராகத் தேர்வு செய்யப் பரிந்துரை செய்யும் முயற்சியில் முதல்வர் ரங்கசாமி இறங்கினார். ஆனால் பாஜக மேலிடம் இதை மறுத்துவிட்டது.

இதற்கிடையே பாஜகவில் எம்.பி. பதவியைப் பெற கடும் போட்டி நிலவியது. பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் செல்வகணபதி, காரைக்கால் தொழிலதிபர் வாசுதேவன், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் எம்.பி. பதவிக்கான பட்டியலில் பேசப்பட்டது. இறுதியில் பாஜக தலைமை, செல்வகணபதியை மாநிலங்களவை எம்.பி. பதவிக்குத் தேர்வு செய்தது.

இதுபற்றி பாஜக தரப்பில் விசாரித்தபோது, "பாஜக தலைமை பல கட்டமாக எம்.பி. பதவிக்கு உரியவரை ஆலோசித்தது. அதில் செல்வகணபதி கல்வியாளர், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, மற்றும் இந்து அமைப்புகளுக்கு நெருக்கமாக இருப்பவர். கல்வியாளரான செல்வகணபதி, தனது கல்வி வளாகத்தில் இந்து அமைப்புகளின் விழாக்கள், கூட்டங்களை நடத்த அனுமதிப்பார்.

கம்பன் பேரவை, விநாயகர் சதுர்த்தி பேரவையில் நிர்வாகியாகச் செயல்பட்டவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல விசயங்களில் கட்சிக்குப் பெருந்தன்மையாக செயல்பட்டதாலும், நீண்டகாலமாக விசுவாசமாக இருந்ததாலும் அவரைக் கட்சி தேர்வு செய்தது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x