Published : 22 Sep 2021 04:52 PM
Last Updated : 22 Sep 2021 04:52 PM

தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கண்பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்கக் கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் 2019-ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கண்பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுசம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் இன்று (செப். 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக, விதிகளை வகுத்து நேற்று (செப். 21) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேசமயம், தேர்வர்களைவிட உதவியாளர்களின் கல்வித் தகுதி குறைவாக இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசாணையை அமல்படுத்தும்போது உள்ள இதுபோன்ற சிக்கல்கள் கலையப்பட்டு, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x