

ஓரிக்கை பகுதியில் சாதுர்மாஸ்ய விரதத்தை நிறைவுசெய்த ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு செவிலிமேட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர், கடந்த ஜூலை 24-ம் தேதி மகா பெரியவர் மணி மண்டபத்தில் தங்கி, சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். இந்த விரதம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு செவிலிமேட்டில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவருக்கு கிராம எல்லையில் பூரணகும்ப மரியாதை அளித்து, வரவேற்றனர். அங்கிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கைலாசநாதர் கோயிலுக்கு அவரை அழைத்து வந்தனர். தொடர்ந்து, விஜயேந்திரர் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர், பக்வத் கீதையின் 11-வது அத்தியாயமான விஸ்வரூப அத்தியாயம் பாராயணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள், வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஓரிக்கை மணி மண்டபம் திரும்பிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்கு வழக்கமான நித்ய பூஜைகளில் ஈடுபட்டார். இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.