Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பு நிறுத்தம்

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னைக் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்கவேண்டும்.

அந்த வகையில், கடந்த ஜூன்14-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து வந்தது. தொடக்கத்தில், விநாடிக்கு 2,100கன அடி திறக்கப்பட்ட கிருஷ்ணாநீர், ஜீரோ பாயின்டுக்கு விநாடிக்கு620 கன அடி வந்து கொண்டிருந்தது.

அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விநாடிக்கு 700 கன அடி, 850 கன அடி என்ற அளவிலும், பிறகு படிப்படியாக குறைந்து விநாடிக்கு 650 கன அடி அளவிலும் வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்படுவது கடந்த 19-ம் தேதி இரவு நிறுத்தப்பட்டது. இதனால், ஜீரோ பாயின்டுக்கு கிருஷ்ணா நீர் வருவது நேற்று காலை 6 மணியளவில் முற்றிலும் நின்றது.

இதையடுத்து, தமிழக எல்லைக்கு, கடந்த ஜூன் 16-ம்தேதி காலை முதல், நேற்று அதிகாலை வரையான 96 நாட்களில் 5.1 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்தடைந்துள்ளது.

மேலும், கிருஷ்ணா நீர், கிருஷ்ணாபுரம் அணையின் உபரிநீர், அவ்வப்போது பெய்யும் மழைஆகிய காரணங்களால் 11,757மில்லியன் கன அடி மொத்தகொள்ளளவுக் கொண்ட பூண்டி,புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகியவற்றில் நேற்று காலை நிலவரப்படி 9,507 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x