Published : 11 Feb 2016 08:58 AM
Last Updated : 11 Feb 2016 08:58 AM

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரில், "ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்பதற் காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்றபோது வருண்குமார் என்பவரை சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். 2011-ம் ஆண்டு மே மாதம் ஐபிஎஸ் அதிகாரி யாக வருண்குமார் நியமிக்கப்பட் டார். அதன் பின்னர் அவரது அணுகு முறையில் மாற்றம் ஏற்பட்டது.

நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவரது பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருந்தனர். முடிவில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வருண்குமார் மறுத்து விட்டார். வருண்குமார் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் பிரியதர்ஷினி கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் வருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

தற்போது சென்னை போலீஸ் மருதம் கமாண்டோ பிரிவின் உதவி ஆணையராக வருண்குமார் இருக்கிறார். அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரியதர்ஷினியும் வழக்கறிஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியதர்ஷினி டெல்லியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் டெல்லி கிழக்கு பாண்டவர் நகர் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி பிரியதர்ஷினி ஒரு புகார் கொடுத்தார். அதில், “நான் வீட்டின் அருகே நடந்து சென்றபோது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், வருண்குமாருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொன்றுவிடுவோம் என இந்தி மற்றும் பிஹாரி மொழிகளில் மிரட்டிவிட்டு சென்றனர்” என்று கூறியிருந்தார். ஆனால், போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதைத் தொடர்ந்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீது டெல்லி கிழக்கு பாண்டவர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x