Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து உயிரிழந்த தினேஷ் வழக்கில் மறு விசாரணைக்கு அனுமதி கோரி போலீஸார் மனு

கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை மறு விசாரணை செய்ய அனுமதி கோரி கோத்தகிரி வட்டாட்சியரிடம் சோலூர்மட்டம் போலீஸார் மனு அளித்துள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளைவழக்கில் கூடுதல் விசாரணைக்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் அரசு தரப்பு சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டோரிடம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாரால் விசாரணை நடத்தப்படுகிறது.

கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி ஆப்ரேட்டர் தினேஷ்கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தினேஷ் தற்கொலையில் மர்மம்இருப்பதாக ஏற்கெனவே புகார்எழுந்த நிலையில், தற்போது தினேஷ் தற்கொலையை மறுவிசாரணை செய்ய அனுமதி கோரி போலீஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு கோத்தகிரி சோலூர்மட்டம் போலீஸாரால் கோத்தகிரி வட்டாட்சியர் சீனிவாசனிடம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸார் கூறும்போது, ‘மனுவை வட்டாட்சியர் ஏற்றுக் கொண்டதும், தினேஷ் தற்கொலை வழக்கு, சந்தேக மரண வழக்காக மாற்றப்படும். பின்னர் மீண்டும் தினேஷ் மரணம் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x