Published : 20 Sep 2021 02:49 PM
Last Updated : 20 Sep 2021 02:49 PM

எழுவர் விடுதலை: நீட்‌ பிரச்சினை‌ போல திமுக அரசு நீர்த்துப்‌போகச்‌ செய்துவிட்டதா?- ஓபிஎஸ் கேள்வி

சென்னை

ஏழு பேர்‌ விடுதலை பிரச்சினையையும்‌ நீட்‌ பிரச்சினை‌ போல திமுக அரசு நீர்த்துப்‌போகச்‌ செய்துவிட்டதோ என்ற எண்ணம்‌ அனைவரிடமும்‌ மேலோங்கி நிற்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள‌ அறிக்கை:

’’ராஜீவ்‌ காந்தி ‌ கொலை வழக்கில்‌ கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர்‌ விடுதலை குறித்து செய்தியாளர்களிடையே பேசிய தமிழ்நாடு சட்டத்‌துறை அமைச்சர்‌ எஸ்‌. ரகுபதியின்‌ பதிலைப்‌ பார்க்கும்போது 'கழுவுற மீனிலே நழுவுற மீன்‌' என்ற பழமொழிதான்‌ என்‌ நினைவிற்கு வருகிறது.

அதிமுக ஆட்சிக்‌ காலத்தில்‌, ராஜீவ்‌ காந்தி கொலை வழக்கில்‌ முப்பது ஆண்டுகளாக ஆயுள்‌ தண்டனை அனுபவித்து வரும்‌ நளினி, முருகன்‌, சாந்தன்‌, பேரறிவாளன்‌, ஜெயக்குமார்‌, ராபர்ட்‌ பயாஸ்‌, ரவிச்சந்திரன்‌ ஆகியோரை விடுதலை செய்யப்‌ பரிந்துரைத்து 09-09-2016 அன்று நடைபெற்ற அமைச்சரவைக்‌ கூட்டத்திலே தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, 07-01-2019 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ ஆளுநர்‌ உரைக்கு நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானத்தின் மீது பேசிய அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ ஸ்டாலின்‌, அமைச்சரவையில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 116 நாட்கள்‌ கடந்துவிட்டன என்றும்‌, இந்த ஏழு பேரின்‌ விடுதலை குறித்துத் தமிழக ஆளுநர்‌ இதுவரையில்‌ எந்த முடிவையும்‌ எடுக்காமல்‌, அதை அப்படியே கிடப்பில்‌ போட்டு வைத்திருக்கிறார்‌ என்றும்‌ தெரிவித்து, அமைச்சரவையில்‌ எடுத்த முடிவை இப்படிக் காலவரையின்றி ஆளுநர்‌ தன்னிடமே வைத்துக்‌ கொள்வது, மக்களாட்சியினுடைய மாண்புக்கு விரோதமானது இல்லையா என்று வினவினார்‌.

அது மட்டுமல்லாமல்‌, 02-02-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ ஆளுநர்‌ உரையாற்ற ஆரம்பிக்கும்போது, ஏழு பேர்‌ விடுதலை குறித்து எந்த முடிவும்‌ எடுக்காததை எதிர்த்து, அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உறுப்பினர்கள்‌ வெளிநடப்பு செய்தனர்‌. இந்தப்‌ பிரச்சினையில்‌ அதிமுக‌ போதிய அழுத்தம்‌ கொடுக்கவில்லை என்றும்‌ விமர்சனம்‌ செய்யப்பட்டது.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, மேற்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இந்தியக்‌ குடியரசுத்‌ தலைவருக்குத்தான்‌ இருக்கிறது என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின்‌ பரிந்துரையைக்‌ குடியரசுத்‌ தலைவருக்குஆளுநர் பரிந்துரைத்தார்கள்‌. இதன்‌ தொடர்ச்சியாக, ஏழு பேர்‌ விடுதலை குறித்து திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையிலும்‌ குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்‌பேரவைத்‌ தேர்தலுக்குப்‌ பிறகு ஆட்சி மாற்றம்‌ ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின்‌‌ தமிழ்நாட்டின்‌ முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர்‌, 19-05-2021 அன்று குடியரசுத்‌ தலைவருக்கு எழுதிய கடிதத்தில்‌, மாநில அரசின்‌ பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்‌ கொண்டார்‌. முதல்வர் கடிதம்‌ எழுதி 124 நாட்கள்‌ ஆகியுள்ள சூழ்நிலையில்‌, எந்தவித நடவடிக்கையும்‌ இல்லாதது பொது மக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, "ராஜீவ்‌ கொலை வழக்கு கைதிகள்‌ ஏழு பேர்‌ விடுதலை தொடர்பாக, முந்தைய ஆளுநரால்‌ குடியரசுத்‌ தலைவருக்குக் கடிதம்‌ அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில்‌, புதிய ஆளுநரிடம்‌ அழுத்தம்‌ கொடுக்க முடியாது" என்று சட்ட அமைச்சர்‌ தெரிவித்து இருப்பது வெந்த புண்ணில்‌ வேல்‌ பாய்ச்சுவது போல்‌ உள்ளது. அமைச்சரின்‌ பேட்டியைப்‌ பார்க்கும்போது, இந்தப்‌ பிரச்சினையையும்‌ நீட்‌ பிரச்சினை‌ போலத் திமுக அரசு நீர்த்துப்‌ போகச்‌ செய்துவிட்டதோ என்ற எண்ணம்‌ அனைவரிடமும்‌ மேலோங்கி நிற்கிறது.

எனவே, முதல்வர் இந்தப்‌ பிரச்சினையில்‌ உடனடியாகத் தலையிட்டு, தனிப்பட்ட முறையிலும்‌, திமுகவின்‌ மக்களவை மற்றும்‌ மாநிலங்களவை உறுப்பினர்கள்‌ மூலமும்‌ மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தத்தைக்‌ கொடுத்து, திமுகவின்‌ தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, ஏழு பேர்‌ விடுதலையை உறுதி செய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்‌கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x