Published : 20 Sep 2021 01:58 PM
Last Updated : 20 Sep 2021 01:58 PM

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்க தீர்மானம்: தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின், 2017 செப்டம்பர் 12ல் நடத்திய பொதுக் குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியை கலைத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராம் குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால்,
இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018 மே 4 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனவும், இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதா? இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தது.

மேலும், தேர்தல் ஆணையம், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் வழக்கு தான் தொடர முடியும் எனவும் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x