Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

தாம்பரத்தில் தனியார் பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலத்தை மீட்டெடுக்க அறநிலையத் துறை நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தார். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தாம்பரம் அருகே உள்ள, தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் இடத்தை வருவாய்த் துறையிடம் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள், வீடுகள், கடைகள் உள்ளன. இவை வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த சூழலில், கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாம்பரம் அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலத்தை ஜமின்தார் ஒழிப்பு சட்டம்-1954-ன் படி வருவாய்த் துறை எடுத்துக்கொண்டுள்ளது. அந்த இடம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமானது. அந்த இடத்தை மீண்டும் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்துள்ளோம்.

அந்த நிலத்தை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கும்படி வருவாய் துறையிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இதுகுறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x