Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

தஞ்சாவூரில் 7 வயது சிறுமியை அடித்துக் கொன்று, சடலம் ஆற்றில் வீச்சு: தாய், அவரது ஆண் நண்பர் கைது

7 வயது சிறுமியை அடித்துக்கொன்று, சடலத்தை ஆற்றில் வீசியதாக சிறுமியின் தாய், அவருடன் கூடாநட்பு கொண்டிருந்த ஆண் நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் மனைவி விஜயலட்சுமி(30). இவரது மகள் வித்யா(7). மேலும், 4 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.

விஜயலட்சுமியின் கணவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், விஜயலட்சுமிக்கும், அவரது தூரத்து உறவினரான தஞ்சாவூர் கோரிக்குளம் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த பிளம்பரான வெற்றிவேல்(36) என்பவருக்கும் இடையே கூடாநட்பு ஏற்பட்டது. வெற்றிவேலுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், அவரது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, தொல்காப்பியர் சதுக்கம் அருகேயுள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கொட்டகையில் விஜயலட்சுமியை அவரது 2 குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களாக தங்கவைத்திருந்த வெற்றிவேல், அவ்வப்போது அங்கு வந்து செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயலட்சுமியின் கொட்டகைக்கு நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வெற்றிவேல் சென்றுள்ளார். அப்போது, வித்யா தூங்காமல் இருப்பதாக கூறிய விஜயலட்சுமியை வெற்றிவேல் தாக்கியுள்ளார். தாய் அழும் சத்தம் கேட்டு வந்த சிறுமி வித்யாவையும் வெற்றிவேல் அடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில், சிறுமி வித்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில், உடனடியாக ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வித்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, வெற்றிவேல், விஜயலட்சுமி மற்றும் வெற்றிவேலின் மைத்துனர் சபரிநாதன் ஆகியோர் சேர்ந்து, வித்யாவின் சடலத்தை கோரிக்குளம் சுடுகாட்டில் புதைக்க எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு ஆள் நடமாட்டம் இருந்ததால், சிறுமியின் சடலத்தை கல்லணைக் கால்வாய் ஆற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமதாஸ் அங்கு சென்று, விஜயலட்சுமி, வெற்றிவேல் ஆகியோரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சிறுமியைக் கொன்று ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள சபரிநாதனை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கல்லணைக் கால்வாய் ஆற்றில் வீசப்பட்ட சிறுமியின் சடலத்தை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x