Last Updated : 19 Sep, 2021 05:38 PM

 

Published : 19 Sep 2021 05:38 PM
Last Updated : 19 Sep 2021 05:38 PM

மாநிலங்களவைத் தேர்தல்; புதுச்சேரியில் ஆளும் கூட்டணியில் தொடர் இழுபறி: முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்

மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொடர் இழுபறி நீடிக்கிறது. பாஜக தலைமை உத்தரவால் முதல்வர் ரங்கசாமியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் திடீரென்று இன்று சந்தித்துப் பேசினர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரேயொரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், யார் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் ரங்கசாமி தலைமையில், ஆட்சி உள்ள நிலையில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே யார் வேட்பாளரை நிறுத்துவது என்று இறுதி செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது,

புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சீட் ஒதுக்க வலியுறுத்தி, பாஜக மற்றும் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்தனர். அதற்கு முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த முடிவும் அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (செப்.19) பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மீண்டும் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விட்டு அவரது வீட்டிலிருந்து வெளியே வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு பற்றி அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி, மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம். இதை முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து அளித்தோம்.

ஆனால், முதல்வர் அதிகாரபூர்வமான பதில் தரவில்லை. இந்நிலையில், கட்சித் தலைமை மீண்டும் ரங்கசாமியைச் சந்தித்து பதில் பெற்றுத் தரும்படி அறிவுறுத்தியது. இதனடிப்படையில், முதல்வரை இன்று சந்தித்தோம். அவர் நேரடியாக பாஜக தலைமையிடம் பேசுவதாகத் தெரிவித்துள்ளார். ரங்கசாமி நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். முதல்வரும், தேசியத் தலைமையும் பேசி இறுதி முடிவை அறிவிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x