சாலை விபத்தில் சிக்கிய தம்பதியர்: மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில், கந்தகுமாரன் பகுதியில், சாலை விபத்தில் சிக்கி விழுந்து கிடந்த தம்பதியரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). இன்று (செப்.19) ஞாயிற்றுக்கிழமை என்பதால், இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி தேவாலய வழிபாட்டுக்கு வீராணம் ஏரிக்கரை சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்கள் இருசக்கர வாகனத்தில் மோதிச் சென்றுவிட்டது. இந்த விபத்தில், கணவன், மனைவி இருவரும் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர். அப்போது, அந்த வழியாக காரில் சென்ற தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாலையில் இருவர் காயத்துடன் கிடப்பதைப் பார்த்து தனது வாகனத்தை நிறுத்திக் கீழே இறங்கினார்.

வயதான தம்பதியரை மீட்டு அவருடைய பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்று காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அவரது உதவியாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, பாதுகாப்பு போலீஸார் மற்றும் தனி உதவியாளர் ஆகியோர் அந்தத் தம்பதியரை மீட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து, புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மனிதாபிமான இந்தச் செயல் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in