Last Updated : 19 Sep, 2021 04:37 PM

 

Published : 19 Sep 2021 04:37 PM
Last Updated : 19 Sep 2021 04:37 PM

திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

கே.என்.நேரு: கோப்புப்படம்

திருச்சி

திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. ஒன்றாக இருந்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை இன்று (செப். 19) பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

"திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 22,82,552 பேரில் 11,71,738 பேருக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் செப்.12-ம் தேதி நடைபெற்ற முகாமில் மட்டும் 1,10,332 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், திருச்சி மாவட்டத்தில் 383 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடத்தப்படும். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் அதிமுக வழக்குத் தொடர்ந்துள்ளது. நீதிமன்றம் கூறுவதற்கேற்ப தேர்தல் நடத்தப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் அனைவரும் ஒன்றாக உள்ளோம். எந்த விரிசலும் இல்லை. ஒன்றாக இருந்து, தேர்தலில் வெற்றி பெறுவோம்".

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x