கோவை அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை: மருத்துவமனையின் டீன் தகவல்

நோயாளிகளுக்கு இனிப்பு வழங்கிய மருத்துவமனையின் டீன் நிர்மலா. உடன், மருத்துவர்கள், செவிலியர்கள்.
நோயாளிகளுக்கு இனிப்பு வழங்கிய மருத்துவமனையின் டீன் நிர்மலா. உடன், மருத்துவர்கள், செவிலியர்கள்.
Updated on
1 min read

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செப்.19) கூறியதாவது:

"கோவை அரசு மருத்துவமனையில் ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை 2019 ஆகஸ்ட் மாதம் இரண்டு ரத்தநாள நிபுணர்களுடன் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்குக் கை, கால், குடல், மூளை போன்ற இடங்களில் ரத்தநாள அடைப்பு ஏற்பட்டால், அந்தப் பகுதி அழுகி குடல், கை, கால்களை அகற்றும் நிலை ஏற்படும்.

இதைத் தவிர்க்க, நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இவ்வாறு அடைப்பு ஏற்பட்டால் நோயாளிக்குத் தாங்கமுடியாத வலி ஏற்படும். அத்தகைய நேரங்களில் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகினால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, அடைப்பைக் கண்டறிந்து அதை அகற்றினால் கை, கால் இழப்பைத் தவிர்க்க முடியும்.

தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் 200 நோயாளிகளுக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 3 மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதியவர்கள், இருதய நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சையை அளிக்க முடியும். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். இங்கு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தநாள அறுவை சிகிச்சைத்துறைத் தலைவர் கே.ராஜேஷ், மருத்துவர்கள் பா.வடிவேலு, பா.தீபன்குமார் ஆகியோர் இந்த சிகிச்சையைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்".

இவ்வாறு டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in